இலங்கையின் கடன் தரநிலையை 'CCC+/C' என S&P Global Ratings உறுதிப்படுத்தியுள்ளது
Reported by Ada Derana
8 hours ago
S&P Global Ratings நிறுவனம் இலங்கையின் கடன் தரவரிசையை 'CCC+/C' ஆக உறுதிப்படுத்தியுள்ளது. முன்னோக்கி 6-12 மாதங்களுக்கு பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி ஒருங்கிணைப்பை ஆதரிக்கும் நிலைமைகள் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டாலும், வெளிவாரி தேவை அழுத்தங்கள், பணவீக்க அபாயங்கள் மற்றும் சவாலான நிதியளிப்பு நிலைமைகள் போன்ற அபாயங்கள் தொடர்ந்து உள்ளன.
எஸ்டி அண்ட் பீ குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் இலங்கையின் நீண்டகால மற்றும் குறுகிய கால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணய இறையாண்மை கடன் தரவரிசையை 'CCC+/C' ஆக உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்த 6 முதல் 12 மாத காலப்பகுதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் நிதி ஒருங்கிணைப்புக்கும் ஆதரவளிக்கும் நிலைமைகள் நீடிக்கும் என்று S&P எதிர்பார்க்கிறது.
இருப்பினும், வெளிவாரி தேவை அழுத்தங்கள், பணவீக்க அபாயங்கள் மற்றும் சவாலான நிதியளிப்பு நிலைமைகள் போன்ற குறிப்பிடத்தக்க அபாயங்கள் இன்னும் நிலவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மாற்று மற்றும் மாற்றத்தக்க திறன் மதிப்பீட்டில் (Transfer and Convertibility Assessment) முன்னேற்றம் கண்டு, அது 'CCC+' இலிருந்து 'B-' ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
'CCC+' தரநிலை இலங்கையின் கடன் நிலைமை அபாயகரமான மட்டத்தில் இருப்பதைக் காட்டுகிறது. நாட்டின் நிதிப் பொறுப்புகளை நிறைவேற்றும் திறன் சாதகமான பொருளாதார மற்றும் நிதி நிலைமைகளிலேயே தங்கியுள்ளது என S&P கூறுகிறது. ஆனால், இலங்கை அரசாங்கம் அண்மையில் உடனடி நிதி அல்லது கொடுப்பனவு நெருக்கடியைச் சந்திக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் உயர் பொதுக் கடன் சுமை தொடர்ந்து முக்கிய சவாலாக உள்ளது. அரசாங்கத்தின் வட்டிப் கொடுப்பனவுகள் வருவாயில் சுமார் 45 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 'டித்வா' சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு யுத்த நிலைமை போன்ற வெளிவாரி அழுத்தங்கள் நாட்டின் வெளிவாரி மற்றும் நிதிச் சமநிலைகளில் தற்காலிக அழுத்தத்தை ஏற்படுத்தியதாக S&P சுட்டிக்காட்டியுள்ளது.
உத்தியோகபூர்வ நிதி உதவிகள், தொடர்ச்சியான பொருளாதார மீட்சி மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் காரணமாக இலங்கை தனது நிதித் தேவைகளை நிர்வகித்துக் கொள்ளவும், நிதி மற்றும் வெளிவாரி நிலைமைகளை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும் என S&P எதிர்பார்க்கிறது. ஆனால், எதிர்பார்க்கப்பட்ட மட்டத்தை விட பலவீனமான நிதி அல்லது வெளிவாரி செயற்பாடுகள் அல்லது புதிய நிதி மற்றும் பணப்புழக்க அழுத்தங்கள் ஏற்பட்டால், கடன் தரவரிசை குறைக்கப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.