ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார அமைச்சிடம் ஒப்படைப்பு: வர்த்தமானி அறிவிப்பு
Reported by Ada Derana
9 hours ago
ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையை மேல் மாகாண சபையிலிருந்து சுகாதார அமைச்சிடம் மாற்றும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 544 படுக்கை கொள்ளளவும் 739 பணியாளர்களும் கொண்ட இந்த வைத்தியசாலை சுமார் பத்து இலட்சம் மக்களுக்கு சேவை வழங்குகிறது. மூன்றாம் நிலை சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
சுகாதார அமைச்சிடம் ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையை கையளிப்பதற்கான சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது மேல் மாகாண சபையால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த வைத்தியசாலையின் ஒட்டுமொத்த படுக்கை கொள்ளளவு 544 ஆகவும், அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை 739 ஆகவும் உள்ளது.
ஹொரணை பிரதேசம் மற்றும் களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கிய மைய இடத்தில் அமைந்துள்ள இந்த வைத்தியசாலை ஊடாக சுமார் பத்து இலட்சம் பேருக்கு சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றன. மாவட்ட பொது வைத்தியசாலையாக மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்கான வசதிகள் மற்றும் மனித வளங்களை மேம்படுத்தும் அவசியம் காரணமாக இந்த மாற்றம் பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டது.
இதற்கு மேல் மாகாண ஆளுநரின் உடன்பாடு பெறப்பட்டுள்ளதுடன், கடந்த ஜூன் 30 ஆம் திகதி இந்த வைத்தியசாலையை சுகாதார மற்றும் ஊடக அமைச்சிடம் ஒப்படைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் அரச சேவை ஆணைக்குழுவின் அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளுக்கு உட்பட்டே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.